தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்

தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

Update: 2021-02-19 01:02 GMT
தென்காசி, 

முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். 

அந்த வகையில், அவர் நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் செய்தார். நேற்று நெல்லை மாவட்டம் வள்ளியூர், களக்காடு, சேரன்மாதேவி, தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி ஆகிய பகுதிகளில் பிரசாரம், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார். நேற்று மாலை பிரசாரத்தை முடித்துக்கொண்டு குற்றாலத்தில் தங்கினார்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை குற்றாலத்தில் இருந்து வேனில் புறப்படுகிறார். காலை 10 மணிக்கு கடையநல்லூரில் பள்ளிவாசல் முன்பு பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 11.30 மணிக்கு புளியங்குடி கண்ணா திரையரங்க வளாகத்தில் மகளிருடன் கலந்துரையாடுகிறார். பின்னர் மதியம் 12.15 மணிக்கு சங்கரன்கோவிலில் இளைஞர்-இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதையொட்டி எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் தென்காசியில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் வழிநெடுகிலும் அ.தி.மு.க.வினர் கட்சி கொடிகள் மற்றும் தோரணங்கள், பதாகைகள் கட்டி உள்ளனர். மேலும் புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் ரோட்டிலும் வரவேற்பு பதாகைகள், கொடிகள், வாழை தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

மேலும் செய்திகள்