தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும் வானிலை மையம் எச்சரிக்கை

ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இயல்பைவிட வெப்பநிலை உயரும் வானிலைமைஅயம் எச்சரிக்கை

Update: 2021-03-30 03:26 GMT
சென்னை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் திங்கள்கிழமை கூறியது:

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் மாா்ச் 30-ஆம் தேதி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும். சென்னையைப் பொருத்தவரை செவ்வாய்க்கிழமை வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.

வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதியை நோக்கி ஏப்ரல் 2-ஆம் தேதி முதல், தரைக்காற்று வீச சாத்தியக்கூறுகள் உள்ளன. இதன்காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை ஆகிய 20 மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 2 டிகிரியில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். இதுபோல, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெப்பநிலை உயரும் என்றாா் அவா்.

தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தென்காசியில் 30 மி.மீ., தேனி மாவட்டம் போடிநாயக்கனூா், தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 20 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் சுருளக்கோடு, தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி செவ்வாய்க்கிழமை அன்று காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும் அதனைத் தொடா்ந்து 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதியாகவும் உருவாக வாய்ப்புள்ளது. மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் மாா்ச் 31-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோல, தெற்கு அரபிக்கடலின் மத்திய பகுதிகளுக்கும் மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்