சரக்கு-பார்சல் சேவையில் ரூ.442¼ கோடி வருவாய் - தென்னக ரெயில்வே தகவல்

தென்னக ரெயில்வே சரக்கு மற்றும் பார்சல் சேவை மூலம் ரூ.442¼ கோடி வருவாய் கிடைத்துள்ளது.

Update: 2021-06-09 18:53 GMT
சென்னை, 

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பஸ் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. ஆனால் ரெயில் சேவையில் பயணிகள் ரெயில்கள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் இயங்கி வருகிறது.

30-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சரக்கு ரெயில்கள் தொடர்ந்து இயங்கி வருகிறது. இதற்கிடையே தென்னக ரெயில்வே சரக்கு மற்றும் பார்சல் சேவையில் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) ஏப்ரல்-மே மாதங்களில் சரக்கு மற்றும் பார்சல் சேவை மூலம் வருவாய் அதிகரித்துள்ளது. இதில் நிலக்கரி, இரும்பு மற்றும் எக்கு ஆலைகளுக்கான மூலப்பொருள், சிமெண்டு, உணவு தானியங்கள், உரங்கள், பெட்ரோலிய பொருட்கள், ஆட்டோ மொபைல்கள், கொள்கலன்கள் உள்ளிட்டவைகளை சரக்கு ரெயில் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

இதன் மூலம் தென்னக ரெயில்வேயின் ஒட்டுமொத்த சரக்கு வருவாய் ரூ.427.35 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டை விட 52.89 சதவீதம் அதிகமாகும். மேலும் பார்சல் சேவையை பொறுத்தவரை நடப்பு நிதி ஆண்டில் 29 ஆயிரம் டன்களை ஏற்றியது. இதன் மூலம் பார்சல் போக்குவரத்தின் வருமானம் ரூ.14.92 கோடியாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.3.46 கோடி அதிகமாகும். இந்த தகவலை தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்