உயர் கல்வித்துறையில் உரிய எண்ணிக்கையில் பணி நியமனம்: தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர், தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-06-14 18:34 GMT

உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த 2019 -2020 க்கான ஆண்டறிக்கையில், உயர்கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. 2014- 2015-ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தமுள்ள 14 லட்சத்து 73 ஆயிரத்து 255 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்.சி. பிரிவினர் 7.1 சதவீதமும், எஸ்.டி. பிரிவினர் 2.1 சதவீதமும் முஸ்லிம்கள் 3.2 சதவீதமும் இருப்பது தெரியவந்தது.

தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் இந்தியா முழுவதும் உயர்கல்வித்துறையில் 15 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிவது தெரியவந்துள்ளது. அதில் எஸ்.சி. பிரிவினர் 9 சதவீதமும், எஸ்.டி. பிரிவினர் 2.4 சதவீதமும், முஸ்லிம்கள் 5.6 சதவீதமும் உள்ளனர் என்று தெரியவந்துள்ளது. இது மாபெரும் அநீதியாகும்.

மக்கள்தொகையில் 14.2 சதவீதம் இருக்கும் முஸ்லிம்கள் உயர் கல்வித் துறை ஆசிரியர் பணிகளில் பாதி அளவு கூட பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை. இந்த அநீதிகளைக் களைந்து இவர்களுக்கு உரிய எண்ணிக்கையில் உயர்கல்வித் துறையில் பணி நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

 

மேலும் செய்திகள்