கொடநாடு விவகாரம்; சட்டமன்ற வளாகத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் தர்ணா

திமுக அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-18 05:17 GMT
சென்னை,

கோடநாடு கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். 

வெளிநடப்பு செய்த பிறகு, சட்டப்பேரவைக்கு வெளியே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணைத்தலைவர் ஓ பன்னீர் செல்வம் உள்பட அதிமுக எம்.எல்.ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். 

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓ பன்னீர்செல்வம்,  “எதிர்க்கட்சிகளுக்கு சட்டமன்றத்தில் வாய்ப்பு தராத போக்கு நிலவுகிறது. பொய்யான வழக்குகளை கொண்டு வந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளை திமுக மேற்கொள்கிறது. எந்த வழக்குகளுக்கும் அஞ்ச மாட்டோம். சட்டப்படி எதிர்கொள்வோம். 

திமுக அரசின் செயல்களை கண்டிக்கும் வகையில்  பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம். எதிர்க்கட்சிகள் மீது திமுக அரசு பொய் வழக்கு போடுகிறது.  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர்  பேச வாய்ப்பு அளிக்கவில்லை. ஜனநாயக விரோத நடவடிக்கைகளில்  திமுக அரசு ஈடுபட்டுள்ளது” என்றார்.

மேலும் செய்திகள்