வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... சென்னையில் இந்த சாலைகள் வழியாக செல்ல தடை..!

தொடர் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-11-29 09:53 GMT
கோப்புப்படம்
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த 15 நாட்களாக தொடர்ந்து விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.

இந்த மழை நீர் பாதிப்புகள் முடிவதற்குள், அடுத்தடுத்து கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பெய்தது. இதனால் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பல இடங்களில் மீண்டும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வாகனங்கள் செல்லும் சாலையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்த தகவலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ளது. 

தொடர் கனமழையால் சாலையில் தேங்கியுள்ள மழைநீர் காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் விவரம் வருமாறு:-

1) ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப்பாதை-போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.
2)  மேட்லி சுரங்கப்பாதை மழைநீர் தேங்கி உள்ளதால்- போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

3) கே.கே.நகர் ராஜ மன்னார் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, 2வது அவென்யூவை நோக்கி திருப்பிவிப்பட்டுள்ளது.

4) வளசரவாக்கம் மெகாமார்ட் சாலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஆற்காடுரோடு செல்ல கேசவர்திணி சாலை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது.

5) வாணிமஹால் முதல் பென்ஸ்பார்க் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.

6) சென்னை மாநகர மழைநீர் வடிகால் வாரிய சீரமைப்பு பணியை அண்ணா பிரதான சாலையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக கே.கே.நகர் ஜி.எச்-க்கு எதிரே உள்ள அண்ணா பிரதான சாலையில் வடிகால் நீர் அமைக்கும் பணியை எளிதாக்கும் வகையில், உதயம் திரையரங்கம் நோக்கி செல்லும் போக்குவரத்து எதிர் திசையில் அனுமதிக்கப்படுகிறது. இதேபோல் உதயம் சந்திப்பில் காசி முனையிலிருந்து அண்ணா பிரதான சாலை நோக்கி செல்லும் கனரக வாகனங்கள் மட்டும் அசோக் பில்லர் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

7) மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லுார் வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது, மாறாக வாகனங்கள் காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்கநல்லுார் நோக்கி திருப்பி விடப்படுகின்றன.

8) அசோக்நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக கடந்து செல்கின்றன.

மேலும் செய்திகள்