சேவை வரி விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம்

சேவை வரி விவகாரத்தில் 10 முறை சம்மன் அனுப்பியும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் ஆஜராகாத நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதித்து எழும்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-01-02 23:54 GMT
சென்னை,

கடந்த 2016-ம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஷால் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் அவர் ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தாதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஷால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சேவைத்துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் ஆஜராகவில்லை.

அதைத்தொடர்ந்து விஷால் மீது சென்னை எழும்பூர் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு சேவை வரித்துறை சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

10 முறை சம்மன்

இந்த வழக்கு நீதிபதி மீனாகுமாரி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

சேவை வரித்துறை சார்பில் நடிகர் விஷாலுக்கு 10 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்றும், இதன்காரணமாக அவர் மீதான விசாரணையை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை என்றும் சேவை வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சி மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீசை நடிகர் விஷால் செயல்படுத்தவில்லை என்பது தெரிகிறது. அதேவேளையில் இந்த வழக்கை சேவை வரித்துறை அதிகாரிகள் தாக்கல் செய்த பின்பு சேவை வரித்துறை அனுப்பிய நோட்டீசை விஷால் செயல்படுத்தி உள்ளார்.

ரூ.500 அபராதம்

சேவை வரித்துறையில் விஷால் ஆஜராகாதது விசாரணைக்கு இடையூறு விளைவித்து சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற அவரது உள்நோக்கத்தை காட்டுகிறது.

எனவே, நடிகர் விஷாலுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்