சாமி கும்பிட சென்றபோது விபரீதம்; கல்லூரி மாணவி விபத்தில் பலி

திருப்பூரில் பல்லடம் அருகே, ஸ்கூட்டர் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பலியாகி உள்ளார்.

Update: 2022-01-04 22:27 GMT

பல்லடம்,


திருப்பூரின் பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையம் சீனிவாசா நகரை சேர்ந்த கருணாநிதி மகள் ரூப சத்யா தேவி (வயது 18).  கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக, மார்கழி மாதத்தினை முன்னிட்டு அருகில் உள்ள சென்னிமலைபாளையம் விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வந்துள்ளார்.

அதேபோல நேற்று விநாயகர் கோவிலுக்கு செல்ல ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.  கணபதி பாளையம்-திருப்பூர் செல்லும் ரோட்டில் சென்னிமலைபாளையம் அருகே நடுத்தோட்டம் என்ற இடம் அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டரில் மோதியது.

இதில் நிலை தடுமாறி விழுந்த ரூப சத்யா தேவி மீது லாரியின் சக்கரம் ஏறியதாக கூறப்படுகிறது.  இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  லாரி மோதி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்