தமிழகத்தில் சிறப்பு முகாம்: ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Update: 2022-01-21 00:07 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் முன்களப்பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் வரும் 31-ந்தேதிக்குள் 10 லட்சம் பேருக்கு ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசி போட தகுதியானவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதையடுத்து அனைத்து தடுப்பூசி மையங்களிலும் சிறப்பு கவுண்ட்டர்கள் வைத்து ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடுகிறவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமைகளில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போட சிறப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

50 ஆயிரத்து 598 பேர்

அந்த வகையில் நேற்று தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 600 இடங்களில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 50 ஆயிரத்து 598 பேருக்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மருத்துவமனைகள் என 160 இடங்களில் ‘பூஸ்டர்’ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 20 ஆயிரத்து 72 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்