தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-04-03 16:30 GMT
சென்னை,

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“வங்கக்கடலில் கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேர் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்! மார்ச் 29-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான 5 நாட்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

ஏற்கனவே 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களையும் சேர்த்து இந்த வாரத்தில் மட்டும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர் கைதுகளை அனுமதிக்கக்கூடாது. மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண அண்மையில் இரு நாட்டு கூட்டு பணிக்குழுக்களின் கூட்டம் நடைபெற்றது. அதில் மீனவர்கள் மீது கடுமை காட்டக்கூடாது என இந்தியா கூறிய பிறகும் கைது தொடர்வது நியாயமல்ல. கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்