டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கு ரத்து

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீதான வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-04-09 00:06 GMT
சென்னை,

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அடையாறில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு முன்பாக நடிகர் செந்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், திருச்சி தொகுதியின் எம்.பி குமார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதாக திருச்சி மத்திய குற்றப்பிரிவில் குமார் புகார் அளித்தார். 

அதில் டிடிவி தினகரனின் தூண்டுதலின் பேரில் தான் நடிகர் செந்தில் தன்னை பற்றி அவதூறாக பேசியதால்  தினகரன் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனவும் கோரியிருந்தார். இதனையடுத்து தினகரன் மற்றும் நடிகர் செந்தில் மீது திருச்சி மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த  வழக்கை ரத்து செய்யக் கோரி தினகரன் மற்றும் செந்தில் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில்  மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்