தஞ்சை: கடப்பாரையால் மனைவி குத்திக் கொலை - விவசாயி கைது...!

திருவோணம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை கடப்பாரையால் குத்திக் கொலை செய்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-16 10:11 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம், இடையாத்தி வேலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47), விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள் (40).
இவர்களுக்கு பாலமுருகன், துரைமுருகன் ஆகிய மகன்களும், கௌசல்யா என்ற மகளும் உள்ளனர். 

 பாலகுமாரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார், கௌசல்யாவிற்கு திருமணமாகி விட்டது. கோவிந்தராஜ், பழனியம்மாள் , கல்லூரியில் படிக்கும் துரைமுருகன் ஆகிய 3 பேரும் வீட்டில் வசித்து வந்தனர்.

மனைவி குத்தி கொலை

சமீபத்தில் கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிந்தராஜுக்கும் பழனியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 அப்போது ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் அருகில் கிடந்த கடப்பாரை கம்பியால் மனைவியின் முகத்தில் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த பழனியம்மாளை பக்கத்தில் இருந்தோர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பழனியம்மாள்  சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்