சென்னையில் இளைஞர் ஆணவக்கொலை வழக்கில் 5 பேர் கைது

சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர் ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-02-25 04:24 GMT

சென்னை,

சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்தவர் பிரவீன். இவர் ஜல்லடையாம்பேட்டை பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சூழலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இளம் பெண்ணை பிரவீன் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் பிரவீன் மீது பெண்ணின் வீட்டார் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்நிலையில், பிரவீன் நேற்று இரவு பள்ளிக்கரணையில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று மது அருந்திவிட்டு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பெண்ணின் அண்ணன் உள்பட 3 பேர் பிரவீனிடம் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தினேஷ் மற்றும் அவரது நண்பர்களை மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி பெண்ணின் சகோதரர் தினேஷ் மற்றும் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் சாதி மறுப்புத் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் சகோதரர் ஆணவக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்