காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கைது
கோவையில் குளக்கரைகளில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.;
ஆர்.எஸ்.புரம்
கோவையில் குளக்கரைகளில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
செல்போன்கள் பறிப்பு
கோவை வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள்.
குறிப்பாக காதல் ஜோடிகளை குளக்கரைகளில் அதிகம் பார்க்க முடிகிறது. அங்கு காதல் ஜோடிகளிடம் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தன. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம், பெரியகடை வீதி போலீஸ் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தனிப்படை விசாரணை
இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில், துணை கமிஷனர் சந்தீஸ் மேற்பார்வையில் ஆர்.எஸ்.புரம் உதவி கமிஷனர் ரவிக்குமார் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, உமா, தலைமை காவலர் கார்த்தி, பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தனிப்படை போலீசார் வாலாங்குளக்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
4 பேர் கைது
இதைதொடர்ந்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில் அவர்கள் கோவையை சேர்ந்த மவுலிதரன் (வயது 20), சஞ்செய் (22), சதீஷ்குமார் (22), மகேந்திரன் (22) என்பதும், அவர்கள் குளக்கரையில் காதல் ஜோடிகளை மிரட்டி செல்போன்களை பறித்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது குறித்து தனிப்படை போலீசார் கூறும்போது, கைதான 4 பேரும் இதுவரை எத்தனை பேரிடம் செல்போன் பறித்தனர் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.