தோட்டத்தில் புகுந்து கரடி அட்டகாசம்; வாழைகள் சேதம்

களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டதால் வாழைகள் சேதமடைந்தன.;

Update:2023-05-02 01:15 IST

களக்காடு:

களக்காடு அருகே தோட்டத்தில் புகுந்து கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டதால் வாழைகள் சேதமடைந்தன.

வாழை மரங்கள் சேதம்

களக்காடு மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதிகளில் சமீப காலமாக யானை, கரடி, கடமான், பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலங்களில் புகுந்து நெல், வாழை, தென்னை, பனை மரங்களை சேதப்படுத்தியும், விவசாயிகளை அச்சுறுத்தியும் வருகிறது.

களக்காடு அருகே கீழவடகரையைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி பாலனுக்கு சொந்தமான தோட்டம், ஊருக்கு அருகே உள்ள பூலங்குளம் பத்துக்காட்டில் உள்ளது. நேற்று முன்தினம் அதிகாலையில் அந்த தோட்டத்குள் புகுந்த கரடி, அங்கிருந்த குலை தள்ளிய வாழை மரங்களை சாய்த்து பழங்களை தின்று சேதப்படுத்தின.

கூண்டு வைத்து பிடிக்க...

இதேபோன்று பக்கத்து தோட்டங்களிலும் கரடி அட்டகாசத்தில் ஈடுபட்டதால் ஏராளமான வாழை மரங்கள் சரிந்து சேதமடைந்தன.

இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், கரடி நடமாட்டத்தால் பகலிலும் தோட்டங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே தோட்டத்தில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் கரடியை கூண்டு வைத்து பிடித்து சென்று வனப்பகுதியில் விட வேண்டும் என்று என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்