ஆங்கில மொழி பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வது அவசியம்; அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பேச்சு

ஆங்கில மொழி பேச்சுத்திறனை வளர்த்துக்கொள்வது அவசியம் என்று அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

Update: 2023-10-13 22:00 GMT

கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் ஆங்கில மொழி பேச்சுத்திறன் குறித்த பயிற்சி பட்டறை கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. இதற்கான தொடக்க விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கலா சேதுபதி கலந்துகொண்டு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், உலகமயமாக்கல் காரணமாக தனியார் நிறுவனங்கள் பெருகிவரும் இந்த சூழலில் ஆங்கில மொழித்திறனை மாணவிகள் வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமானது. மாணவிகள் அனைத்து திறன்களையும் கற்பதற்கு தேவையான வாய்ப்புகளை பல்கலைக்கழகம் ஏற்படுத்தி வருகிறது. இதனை மாணவிகள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதயம் நல்லெண்ணெய் குழும நிறுவனம் மூலமாக மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், பல்கலைக்கழக பதிவாளர் சீலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பயிற்சி பட்டறையையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்