ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு

ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது கிணற்றில் தவறி விழுந்து பெண் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-07 09:19 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பெரியகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி ரேகா (வயது 30). இந்நிலையில் நேற்று மதியம் ரேகா அதே கிராமத்தில் சென்னையைச் சேர்ந்த ஏகாத்தம்மா என்பவருக்கு சொந்தமான கிணற்றின் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்துள்ளார். அங்கு கிணற்றின் அருகே உள்ள செடி, கொடி தழைகளை ஆடுகளுக்கு போடுவதற்காக அவர் உடைக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்ட அதே பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி ரேகாவின் உடலை கைப்பற்றினர். பின்னர் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரேகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்