பள்ளிபாளையம் அருகே மொபட் மீது வாகனம் மோதி 2 தொழிலாளிகள் பலி

Update: 2022-12-11 18:45 GMT

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே மொபட் மீது வாகனம் மோதி 2 லேத் பட்டறை தொழிலாளிகள் பலியாகினர்.

தொழிலாளிகள்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 24). அதே பகுதியை சேர்ந்தவர் வல்லரசு (30). இவர்கள் 2 பேரும் அங்குள்ள லேத் பட்டறையில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை 2 பேரும் வேலையை முடித்துவிட்டு மொபட்டில் ஓடப்பள்ளியில் இருந்து பாப்பம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மொபட்டை அருள் ஓட்டினார். வல்லரசு பின்னால் அமர்ந்திருந்தார். அப்போது முனியப்பன் கோவில் சாலையில் சென்றபோது பின்னால் வேகமாக வந்த வாகனம் மொபட் மீது மோதியது.

சாவு

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அருள், வல்லரசு ஆகியோர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் பலியான 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தில் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் பலியான அருளுக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகனும், வல்லரசுக்கு மகாலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

விபத்தில் லேத் பட்டறை தொழிலாளர்கள் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்