தொழிலாளியை கடத்தி சென்று கொலை செய்த வாலிபர் கைது

Update:2023-06-09 22:23 IST


முத்தூர் அருகே முன் விரோதம் காரணமாக தொழிலாளியை கடத்தி சென்று கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொழிலாளி

திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட சின்னக்கவுண்டன்வலசை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 43). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வரட்டுக்கரை டாஸ்மாக் கடை அருகில் கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் மோகன சுந்தரத்தின் பிணத்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மோகனசுந்தரத்திற்கு தனது வீட்டின் அருகில் உள்ள சக்திவேல் என்பவரின் குடும்பத்தினருடன் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.,இந்த நிலையில் மோகனசுந்தரம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சக்திவேல் வீட்டுக்கு சென்ற குடிநீர் குழாயை கத்தியால் அறுத்து விட்டார். இதனால் சக்திவேல் மகன் அன்புக்குமார் மாரிமுத்துவுக்கும் (35), மோகனசுந்தரத்திற்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

கைது

அதன் பின்பு அன்புக்குமார் மாரிமுத்துவின் உறவினர் ஒருவர் மற்றும் 2 பேர் வந்து மோகனசுந்தரத்தை ஒரு காரில் ஏற்றி கொண்டு சென்று, முத்தூர் பகுதியில் வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மோகனசுந்தரத்தின் உடலை அன்புக்குமார் மாரிமுத்து மற்றும் சிலர் வரட்டுக்கரை டாஸ்மாக் கடை அருகில் உள்ள கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் வீசிவிட்டு சென்று உள்ளனர் என்றும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை ெகாலை வழக்காக மாற்றி அன்புக்குமார் மாரிமுத்துவை போலீசார் நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்