நர்ஸ் கைது; காதலன் உள்பட 2 பேருக்கு வலைவீச்சு

சாலையோரம் ஆண் சிசு பிணம் வீசப்பட்ட வழக்கில் நர்ஸ் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-25 20:22 GMT

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே ஆணையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரம் கடந்த 23-ந்தேதி பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண்சிசு பிணம் கிடந்தது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆண் சிசுவை வீசிச் சென்றது மூலைக்கரைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றும் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த ஜெகநாதன் மகள் தனலட்சுமி (வயது 23) என்பது தெரிய வந்தது. இவர் தன்னுடன் படித்த மேலச்செவல் மணிமுத்தான்குளத்தைச் சேர்ந்த இசக்கிதுரையை (24) காதலித்து நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. பின்னர் கர்ப்பமடைந்த தனலட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் இசக்கிதுரைக்கு தெரிவித்துள்ளார்.

உடனே இசக்கிதுரையும், அவருடைய தாயார் ராசாமணியும் மோட்டார் சைக்கிளில் தனலட்சுமியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் ஆணையப்பபுரம் பஸ் நிறுத்தம் அருகில் தனலட்சுமிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்தது. இதையடுத்து அந்த சிசுவை அங்கு வீசிச் சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக தனலட்சுமியை கைது செய்த போலீசார், அவரை மருத்துவ பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான இசக்கிதுரை, ராசாமணி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்