முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-05-23 06:26 GMT

சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் முதல்-அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தி வெடிகுண்டு எதுவும் இல்லாததை உறுதி செய்தனர். பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த அந்தோணி ராஜ் என்பது தெரியவந்தது. இவர் மது போதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது, அதனை தொடர்ந்து ஆழ்வார்குறிச்சி போலீசார் அந்தோணி ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்