திருமணமான 14 நாட்களில் புதுப்பெண் தற்கொலை

திருமணமான 14 நாட்களில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Update: 2022-11-28 07:13 GMT

புதுப்பெண்

சென்னை தண்டையார்பேட்டை தமிழர் நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய மனைவி கவுரி. இவர்களுடைய மகள் ரேகா (வயது 35). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் லேப் டெக்னீஷியனாக வேலை செய்து வந்தார்.

இவருக்கும், சென்னை தியாகராயநகர் கிரியப்பா தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவருக்கும், இருவீட்டு பெரியோர்கள் முன்னிலையில் கடந்த 14-ந் தேதி வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு ரேகா, கணவர் வீட்டில் தங்கியிருந்தார். கடந்த 19-ந் தேதி தனது தாய் வீட்டுக்கு வந்து, இங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.

தூக்குப்போட்டு தற்கொலை

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ராஜசேகரன் தனது மனைவி ரேகாவை தனது வீட்டுக்கு அழைத்துச்செல்ல வருவதாக மாமனார் பிரகாசுக்கு செல்போனில் தகவல் தெரிவித்தார். இதனால் கணவன்-மனைவி இருவரும் நேற்று காலையிலேயே காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்று விட்டனர்.

வீட்டில் ரேகா மட்டும் தனியாக இருந்தார். மார்க்கெட்டில் இருந்து வீட்டுக்கு திரும்பி வந்த பிரகாஷ், கவுரி இருவரும் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தங்கள் மகள் ரேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆர்.கே.நகர் போலீசார், ரேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆர்.டி.ஓ. விசாரணை

கணவர் தன்னை அழைத்துச்செல்வதற்காக வருகிறார் என தெரிந்ததும் ரேகா தற்கொலை செய்து கொண்டிருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணமான 14 நாட்களிலேயே அவர் தற்கொலை செய்திருப்பதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

திருமணமான 14 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்