ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள்

நெல்லையில் ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதால் சிக்கினார்கள்.;

Update:2023-03-13 00:36 IST

நெல்லையில் ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த வாலிபர்கள் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதால் சிக்கினார்கள்.

வாகன சோதனை

நெல்லை மாநகர பகுதிகளில் சாலை விதிகளை மீறி இயக்கப்படும் இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், மாநகர பகுதி முழுவதும் கடந்த சில வாரங்களாக போக்குவரத்து பிரிவு மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசாரால் கடுமையான வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

வாகன சோதனையின்போது விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்கள், லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் இயக்குபவர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் போலீசார் அதிகளவு அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும் மோட்டார் சைக்கிள்களில் சாகசம் செய்பவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்கின்றனர். மேலும் அவர்களது லைசென்சை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சாகசம்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் தனது ஹெல்மெட்டில் கேமரா பொருத்தியவாறு வேகமாக சென்றுள்ளார். குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற அந்த வாலிபர் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீசாருக்கு சைகை காட்டி விட்டு சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியது.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சிறுவன் உள்பட 6 பேர் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டதும், மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபர்களை போலீசார் பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களது மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார், உதவி போலீஸ் கமிஷனர்கள் சதீஷ்குமார், ராஜேஸ்வரன், இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், விஜி, பேச்சிமுத்து, செல்லத்துரை ஆகியோர் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொலைக்கு நிகரான வழக்கு

மோட்டார் வாகன சட்டத்தை மீறி ஹெல்மெட்டில் கேமரா பொருத்தி சாகசத்தில் ஈடுபட்ட ஒரு சிறுவன் மற்றும் 5 வாலிபர்கள் சிக்கி உள்ளனர். இதில் 5 பேருக்கு லைசென்ஸ் உள்ளது. அவர்களது மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

மாநகர பகுதிகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களில் சென்று விபத்தை ஏற்படுத்தி, அந்த நபர் இறந்து விட்டால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் மீது கொலைக்கு நிகரான குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும்.

விபத்தில் சிக்கிய நபர் காயம் அடைந்து இருந்தால், இந்திய தண்டனைச் சட்டம் 308-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். 7 வருடம் வரை அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும். தொடர்ந்து மாநகர பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சென்று, மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடக் கூடாது என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பெற்றோர் மீது வழக்கு

இதுதவிர இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதில் புகார்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிப்போம். இதுதவிர புதிய வாகனங்கள் வாங்கி அதில் கூடுதல் வேகத்திற்காக சில பாகங்களை பொருத்திக் கொடுக்கும் கடைகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

18 வயதுக்கு கீழே உள்ள வாலிபர்களோ, மாணவர்களோ இருசக்கர வாகனங்கள் இயக்கினால் அவரது பெற்றோர்தான் பொறுப்பு. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இதுவரை4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல்லை மாநகரப் பகுதிகளில் வீடுகளில் கொள்ளையடித்ததாக கைதான விடுதலைசிறுத்தை அமைப்பின் நிர்வாகி ஜெயக்குமார் மீது இதுவரை 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்