நெல்லை: பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம் எவ்வளவு?
பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட உள்ளது.;
நெல்லை,
தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த நாகரிகங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கை முறைகள் பற்றிய உண்மைகளை வெளிக்கொணர அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தை அறிந்து கொள்ள தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை மற்றும் திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டி ஆகிய நான்கு இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
இந்த அகழ்வாராய்ச்சி பணியின்போது முதுமக்கள் தாழி, நாணயம், பானை, ஏடுகள் போன்ற ஏறத்தாழ 2 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்கள் கண்டறியப்பட்டன. இப்படி அகழ்வாய்வுகளின் போது கண்டறியப்பட்ட பொருட்களை வைக்க திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டபமாக உருவாகியுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் திறந்து வைத்தார். பொருநை அருங்காட்சியகம் திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்பட உள்ளது. அத்துடன், அருங்காட்சியகம் செயல்படும் நேரம், கட்டணம் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன. கட்டண விபரம் பின்வருமாறு;
* பொருநை அருங்காட்சியகம் காலை 10 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.
* அருங்காட்சியகத்தை பார்வையிட வரும் பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* பள்ளி மாணவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டவர்களுக்கு ரூ.50 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படும்.
* அருங்காட்சியகத்தில் இருக்கும் 5டி திரையரங்கிற்குச் செல்ல ரூ.25 தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.