மாங்காய் திருடிய 9 பேர் மீது வழக்கு

தோட்டத்துக்குள் புகுந்து மாங்காய் திருடிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-05-28 15:19 GMT

மதுரை மாவட்டம் அழகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன் (வயது 61). இவருக்கு, வடமதுரை அருகே வல்லம்பட்டி கிராமத்தில் தோட்டம் உள்ளது. அதில் மா, தென்னை, எலுமிச்சை உள்ளிட்ட மரங்கள் உள்ளன. அந்த தோட்டத்தில், கரந்தன் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 25-ந்தேதியன்று கரந்தன் தோட்டத்தில் இருந்தார்.

அப்போது மதுரை மாவட்டம் புதூரை சேர்ந்த பாலமுருகன் (35) என்பவர், தனது குடும்பத்தினருடன் தோட்டத்துக்குள் அத்துமீறி நுழைந்தார். இதனை தட்டிக்கேட்ட கரந்தனுக்கு அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பின்னர் தோட்டத்தில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மாங்காய்களை அவர்கள் பறித்து சென்று விட்டதாக தெரிகிறது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஜமால் மொய்தீன் புகார் செய்தார்.

அதன்பேரில் பாலமுருகன் உள்பட 9 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்