டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூல் - நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவையில்லை

சென்னையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் குடிநீர், கழிவுநீரகற்று வரி வசூலிக்கப்பட உள்ளதால் நாளை முதல் நுகர்வோர் அட்டை தேவை இல்லை என்று குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2023-03-31 07:57 GMT

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை குடிநீர் வாரியத்தின் நுகர்வோர்கள் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்கள் செலுத்துவதை டிஜிட்டல் கட்டண முறையில் ஊக்குவிக்கவும், வரிசையில் காத்திருக்கும் நேரத்தைத் தவிர்க்க மற்றும் காகித பயன்பாட்டை குறைக்கவும் நாளை(சனிக்கிழமை) முதல் நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையில் எந்த பதிவும் செய்யப்படமாட்டாது.

நுகர்வோர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நுகர்வோர் அட்டை சென்னை குடிநீர் வாரியத்தால் வழங்கப்படுகிறது. தற்போது 2024-25 வரையிலான கால கட்டத்துக்கு அனைத்து நுகர்வோர்களுக்கும் நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையை நவீன இணைய அமைப்புக்கு ஏற்ப மேம்படுத்தியுள்ளது. இந்த இணைய வழியிலான கட்டண நுழைவாயிலை பயன்படுத்தி 'கிரெடிட்' கார்டு, 'டெபிட்' கார்டு மற்றும் 'நெட் பேங்கிங்' மூலமாக செலுத்தலாம். மேலும் யு.பி.ஐ, கியூஆர் குறியீடு மற்றும் பி.ஓ.எஸ். போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகர்வோர்கள் தங்களின் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை செலுத்தவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இணைய வசதி மூலம் நுகர்வோர்கள் தாங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை தெரிந்துகொள்ளவும், பணம் செலுத்தும் ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் இயலும். மேலும், வசூல் மையத்தில் பணம் செலுத்தும்போது அளிக்கப்படும் கணினி ரசீது பணம் செலுத்தியதற்கான பதிவாக கருதப்படும்.

எனவே, நுகர்வோர்களுக்கு 1-ந்தேதி (நாளை) முதல் புதிதாக நுகர்வோர் அட்டை வழங்கப்படமாட்டாது. ஏற்கனவே உள்ள நுகர்வோர் அட்டையிலும் பணம் செலுத்தப்பட்டதற்கான எந்த பதிவும் செய்யப்பட மாட்டாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்