அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு
தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் சிகிச்சை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.;
விழுப்புரம்:
கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகம், மருந்தகம், மருந்து கிடங்கு, ஊசி போடும் அறை, பதிவு செய்யும் அறை, புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு கட்டிடம், தொற்றுநோய் பரிசோதனைக்கூடம் ஆகியவற்றை நேற்று காலை மாவட்ட கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர், தமிழக மக்கள் உயர்தர சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதனடிப்படையில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு கிராமப்புற பகுதிகளிலும் உயர்தரமான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
அறிவுரை
அதன்படி தற்போது தோகைப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களை காத்திருக்க வைக்காமல் கனிவாக பொறுப்புடன் நடத்துவதோடு அவர்களிடம் உடல்நிலை பற்றி தெளிவாக கேட்டறிந்து சரியான முறையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சுத்தமாக வைத்திருப்பதோடு ஏதேனும் சேதம் ஏற்பட்டிருந்தால் உடனடியாக சரிசெய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பொற்கொடி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கார்த்திகா மற்றும் செவிலியர்கள், சுகாதார நிலைய பணியாளர்கள் உடனிருந்தனர்.