ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் மூழ்கி கார் டிரைவர் பலிபெங்களூருவை சேர்ந்தவர்

Update: 2023-05-01 19:00 GMT

பென்னாகரம்:

ஒகேனக்கல்லில் உள்ள காவிரி ஆற்றில் மூழ்கி பெங்களூருவை சேர்ந்த கார் டிரைவர் பலியானார்.

கார் டிரைவர்

கர்நாடக மாநிலம் பெங்களூரு சாமுண்டீஸ்வரி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ரமணப்பா. இவருடைய மகன் சிவப்பா (வயது 37). கார் டிரைவர். திருமணமான இவருக்கு நாகவேணி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் சிவப்பா நேற்று தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் ஒகேனக்கல் வந்துள்ளார். பின்னர் அவர்கள் ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிபார்த்து விட்டு ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது சிவப்பா ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக சிவப்பா தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை

இதையடுத்து அவருடைய நண்பர்கள் ஒகேனக்கல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றில் இறந்த நிலையில் சிவப்பாவின் உடலை கைப்பற்றினர். இதை பார்த்த நண்பர்கள் கதறி துடித்தனர். இதையடுத்து போலீசார் சிவப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லூரி மாணவர் உடல் மீட்பு

இதேபோல் நேற்று முன்தினம் கோத்திகல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர் சேவியர் உடல் மணல்திட்டு பகுதியில் நேற்று மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 2 நாட்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலியான சம்பவம் ஒகேனக்கல்லில் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்