பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பலி
பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியாகினர்.;
பாலக்கோடு:
பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலத்தில் மின்சாரம் தாக்கி கணவன், மனைவி பலியாகினர்.
தம்பதி பலி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மகேந்திரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 62). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கந்தம்மாள் (58). இந்த நிலையில் நேற்று கோவிந்தசாமி கூலி வேலைக்கு வெளியே சென்று விட்டார். வீட்டில் இருந்த கந்தம்மாள் மின்விளக்கு எரியாததால் வீட்டின் கூரை மீது ஏறி மின்சார வயரை அசைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் கந்தம்மாள் கூரை மீது சரிந்து விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனிடையே வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கோவிந்தசாமி மனைவியை தேடினார். அப்போது கந்தம்மாள் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கோவிந்தசாமி மனைவியை தூக்க முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதனால் அலறியபடி கீழே விழுந்த கோவிந்தசாமியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கணவன், மனைவி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய அதிகாரிகள் அங்கு சென்று மின் இணைப்பை துண்டித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கணவன், மனைவி 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கியதில் கணவன், மனைவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.