மோகனூர்:
மோகனூர் அருகே வளையப்பட்டியில் கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான கருவாட்டு மில் உள்ளது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த அர்ஜூன் (வயது 30) என்பவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கோவிந்தசாமி மகன் விக்ரம் (19) மற்றும் அர்ஜூன் கடந்த 20-ந் தேதி கருவாடு வேகவைக்கும் எந்திரத்தில் கருவாட்டை வேகவைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது வெந்த கருவாட்டை எடுக்க மூடியை திறந்தனர்.
அந்தசமயம் எதிர்பாராதவிதமாக அர்ஜூன் மற்றும் விக்ரம் ஆகியோர் மீது நீராவி தாக்கியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அர்ஜூன் சேலம் அரசு மருத்துவமனையிலும், விக்ரம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அதில் அர்ஜூன் சிகிச்சை பலனின்றி கடந்த 21-ந் தேதி உயிரிழந்தார்.
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விக்ரம் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விக்ரம் இறந்தார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.