பாலக்கோடு அருகேஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலி

Update: 2023-04-16 19:00 GMT

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவி பலியானார்.

கல்லூரி மாணவி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தீர்த்தகிரி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகள் ராகவி (வயது 19). இவர் தர்மபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மகேந்திரமங்கலம் அருகே சின்னகோழி மேக்கனூர் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

பின்னர் அவர் தனது தோழிகளுடன் அங்குள்ள ஏரிக்கு குளிக்க சென்றார். மாணவி ராகவிக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. இதனால் அவர் ஏரியின் கரையோரத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் வழுக்கி மாணவி தண்ணீரின் ஆழமான பகுதியில் விழுந்ததாக தெரிகிறது.

விசாரணை

இதனால் அவர் தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு தோழிகள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் மாணவி ராகவி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மகேந்திரமங்கலம் போலீசார் ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்