விண்வெளி புறக்கோள்களில் உயிர்கள் இருக்கலாம் - இஸ்ரோ தலைவர் தகவல்

சமீபத்தில் ஏவப்பட்ட அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களால் மோதல்களுக்கு வழிவகுக்கும் அபாயங்கள் ஏற்படலாம் என இஸ்ரோ தலைவர் தெரிவித்தார்.

Update: 2024-04-28 22:08 GMT

கோப்புப்படம்

சென்னை,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் ஆன்லைன் உரையாடல் நடத்தியது. இதில் பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் பல கேள்விகளை முன்வைத்தனர்.

இதற்கு பதில் அளித்து சோம்நாத் பேசும்போது, 'விண்வெளியில் 'எக்ஸோப்ளானெட்டுகள்' நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள கோள்கள் (வெவ்வேறு நட்சத்திரங்களைச் சுற்றி வருகின்றன). இதுவரை இதேபோன்று 5 ஆயிரம் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றின் வளிமண்டலத்தை பார்க்கும்போது, இந்தக் கோள்களில் சிலவற்றில் தண்ணீர் இருப்பதால், அவை வாழ்வதற்கு உகந்தவை. உயிர்கள் அங்கேயும் இருக்கலாம்.

இருப்பினும், அவை நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன. அவற்றை எளிதில் அணுக முடியாது. இந்த தலைப்புகளில் கேரளா மாநிலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விவசாயத்தில் இஸ்ரோவின் முன்முயற்சிகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், 'உயர் தெளிவுத்திறன் மற்றும் நடுத்தர தெளிவுத்திறன் கொண்ட தகவல்களை புரிந்து கொள்ள செயற்கைகோள்கள் உதவுகின்றன. வளர்ச்சி விகிதம் மற்றும் விவசாயத்திற்கான சரியான பகுதிகளை கண்டறிய உதவுகிறோம்.

பூமியில் உள்ள கனிமங்கள், உப்புத்தன்மை மற்றும் நீர் உள்ளடக்கம் ஆகியவற்றை பார்க்கிறோம். கருவிகளின் உதவியுடன், அறுவடை பற்றிய கணிப்புகளையும் செய்கிறோம். எதிர்காலத்தில் சிறந்த விவசாய செயற்கைகோள்களை உருவாக்குவோம். சமீபத்திய ஆண்டுகளில் ஏவப்பட்ட அதிக எண்ணிக்கையிலான செயற்கைகோள்களால் மோதல்களுக்கு வழிவகுக்கும் அபாயங்கள் ஏற்படலாம். 'மெத்தலாக்ஸ் என்ஜின்கள் மற்றும் நிசார் (நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அபர்ச்சர் ரேடார்) பணியில் அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மை பணிகள் நடந்து வருகிறது.

பல மாணவர்கள், குறிப்பாக தங்கள் இளைய வயதின் ஆரம்ப காலத்தில், விண்வெளி அறிவியலில் தொழில் வாய்ப்புகளைப் பற்றி அறிய ஆர்வமாக இருந்தனர். அதற்கு பதில் அளித்த சோம்நாத், ஒரு வெற்றிகரமான விண்வெளி விஞ்ஞானிக்கு ஒரு திடமான தத்துவார்த்த அடித்தளம் மற்றும் தொலைநோக்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி உள்ளிட்ட நடைமுறை திறன்கள் தேவை என்றார்.

தொடர்ந்து, புறக்கோள்களில் வாழ்வதற்கான வாய்ப்புகள் என்ன? எப்போது வேண்டுமானாலும் முழுமையான நிலையான விண்வெளி குடியிருப்பை நாம் கற்பனை செய்ய முடியுமா? விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் முதலீட்டுக்கு வாய்ப்பு உள்ளதா?, விண்வெளி குப்பைகளை கையாள்வதற்கான வழிமுறைகள் என்ன? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்