கத்தரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
ஆலங்குளம் பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.;
ஆலங்குளம்,
ஆலங்குளம் பகுதியில் கத்தரிக்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கத்தரிக்காய் சாகுபடி
ஆலங்குளம் அருகே உள்ள மேலாண்மறைநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எண்ணற்ற விவசாயிகள் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் வருவாயை கொண்டு தான் தங்களது குடும்பத்தை நடத்தி வருகின்றனர். அத்துடன் தங்களது குழந்தைகளையும் கல்வி கற்க வைக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கத்தரிக்காய் கிலோ ரூ.50 வரை விற்பனையானது. இந்தநிலையில் திடீரென விலை வீழ்ச்சி அடைந்து ரூ.20-க்கு வந்து விட்டது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
விலை வீழ்ச்சி
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பேர் விவசாயத்தை நம்பி தான் வாழ்ந்து வருகிறோம். தற்போது நாங்கள் கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளோம்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிலோ ரூ.50 வரை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இந்த விலை ஓரளவு எங்களுக்கு போதுமானதாக இருந்தது. இந்தநிலையில் தற்போது விலை வீழ்ச்சி அடைந்து ரூ.20-க்கு வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
அரசு சந்தை
இதனால் நாங்கள் செலவழித்த தொகையில் சிறிது கூட எடுக்க முடியாமல் அவதிப்படுகிறோம். வங்கியில் கடன் வாங்கி சாகுபடி செய்தவர்கள் கடனை அடைக்க முடியாமல் அவதிப்படுகிறோம்.
எனவே காய்கறிகளை விற்பதற்கு அரசே சந்தைகளை ஏற்படுத்தி நல்ல விலை கொடுத்து விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும். இ்வ்வாறு அவர்கள் கூறினர்.