முட்புதரில் ரத்த காயங்களுடன் பெண் பிணம்

கள்ளக்குறிச்சியில் ரத்த காயங்களுடன் பெண் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-02-01 18:45 GMT

கள்ளக்குறிச்சியில் உள்ள துருகம்சாலை கோமுதி ஆற்றுப்பாலம் அருகில் உள்ள முட்புதரில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இருப்பினும் இறந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் இறந்த பெண்ணின் மூக்கு, வாய், கண் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதனை தொடர்ந்து இறந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இது குறித்து கள்ளக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் பழனிவேல் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரை யாரேனும் அடித்து கொலை செய்து முட்புதரில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்