பிற்படுத்தப்பட்டோர் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க நிதிஉதவி - காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க நிதி உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-07 08:40 GMT

ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்காகவும் மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு தலா ரூ.3 லட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணையிட்டுள்ளது.

தையல் தொழிலில் ஈடுபட்டு வரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் வகுப்பை சேர்ந்த ஆண், பெண் 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அந்த குழுவிற்கு ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைக்க உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி வழங்கப்படும்.

தையல் தொழில்

ஒரு குழுவிற்கான தோராய செலவினம் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

பயனாளிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆகும்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற விதவை பெண்கள் அமைந்துள்ள குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும்.

10 நபர்களுக்கும் தையல் தொழில் தெரிந்திருத்தல் அவசியம் ஆகும்.

குழு உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இனத்தைசேர்ந்த மக்கள் தகுதியான குழுக்களை அமைத்து குழுவின் மூலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயனடையுங்கள்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்