கோடை சீசனுக்கு முன்னரே பூத்துக்குலுங்கும் மலர்கள்

ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்கு முன்னரே மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.;

Update:2023-03-04 00:15 IST

ஊட்டி

ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்கு முன்னரே மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன.

ரோஜா பூங்கா

மலை மாவட்டமான நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இங்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு மலர் அலங்காரங்கள், கண்காட்சிகள் இடம் பெறுவது வழக்கம்.

இந்த நிலையில் கோடை சீசனையொட்டி ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் ரோஜா செடிகள் நன்றாக செழித்து வளர்வதற்காக கவாத்து செய்யப்பட்டது. அங்கு 4 ஆயிரத்து 201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 வீரிய ரக ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. செடிகளுக்கு இயற்கை உரம் இடுவது, களை எடுப்பது, நோய் தாக்காமல் இருக்க மருந்து தெளிப்பது போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பூத்துக்குலுங்கும் மலர்கள்

அலங்கார செடிகள் அழகாக வெட்டி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. கோடை சீசனை வரவேற்கும் வகையில் தற்போதே பூங்காவில் ரோஜா மலர்கள் பூக்க தொடங்கி உள்ளது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்பட பல்வேறு வண்ணங்களில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை நடைபாதையில் நடந்து சென்றபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

2 அடுக்குகளில்...

இது குறித்து பூங்கா நிர்வாகத்தினர் கூறியதாவது:-

வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் ரோஜா பூங்காவில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்படும். அதன்படி கடந்த மாதம் கலெக்டர் முன்னிலையில் கவாத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகள் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஆனாலும் தற்போது வரும் சுற்றுலா பயணிகளை ஏமாற்றக்கூடாது என்பதற்காக 1-வது மற்றும் 5-வது அடுக்கில் மட்டும் ரோஜா பூக்கள் தற்போது பூக்கும் வகையில் ஏற்கனவே நவம்பர் மாதத்திலேயே கவாத்து செய்யப்பட்டு விட்டது. இதனால் தற்போது அந்த 2 அடுக்குகளில் மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. இவை தொடர்ச்சியாக கோடை சீசனுக்கும் பூத்துக்குலுங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்