பள்ளியில் உணவு திருவிழா

கம்பத்தில் உள்ள நாளந்தா இன்னோவேஷன் பள்ளியில் உலக உணவு தினத்தையொட்டி நேற்று உணவுத்திருவிழா நடைபெற்றது.

Update: 2023-10-16 22:45 GMT

கம்பத்தில் உள்ள நாளந்தா இன்னோவேஷன் பள்ளியில் உலக உணவு தினத்தையொட்டி நேற்று உணவுத்திருவிழா நடைபெற்றது. இதற்கு பள்ளி தாளாளர் டாக்டர் விசுவநாதன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக எடுத்துக்கொள்ள கூடாது. பாரம்பரிய உணவுகளை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதன்மூலம் ஆரோக்கியமான வாழ்வு பெறலாம் என்றார். விழாவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மலர்விழி, முதல்வர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், உடலுக்கு நன்மை தரும் உணவுகள், தீமை தரும் உணவுகள் என்ற தலைப்புகளில் பல்வேறு வகையான உணவு பொருட்களை மாணவ-மாணவிகள் கொண்டு வந்து காட்சிப்படுத்தினர். முளைகட்டிய தானியங்கள், புடலங்காய் வடை, கேரட் சாதம், கறிவேப்பிலை சாதம், தயிர் சாதம், தேங்காய் சாதம், கம்மங்கூழ், தக்காளி சாதம், நவதானியங்களின் கூட்டு, தேங்காய் லட்டு, தினை பாயாசம், வரகு பாயாசம், பன்னீர் கேரட் அல்வா, கருப்பு கவுனி சாதம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

ஒவ்வொரு உணவு வகைகள் அருகிலும் அதன் செயல்முறை, நன்மைகள், தீமைகள் குறித்த அட்டவணையை மாணவ-மாணவிகள் வைத்திருந்தனர். மேலும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு மாணவ-மாணவிகள் பதில் அளித்தனர். விழாவிற்கு வந்த பார்வையாளர்கள் பல்வேறு உணவுகளை சாப்பிட்டு பார்த்தனர். முன்னதாக உண்ணும் உணவை நமக்கு அளித்ததற்காக விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி அலுவலக மேலாளர் விக்னேஷ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்