அரசு மறுவாழ்வு இல்லம்

வெள்ளையூாில் அரசு மறுவாழ்வு இல்லம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

Update: 2022-11-06 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் அரசு மறுவாழ்வு இல்லம் செயல்பட்டு வருகிறது. இது கடந்த 1972-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பிச்சைக்காரர்கள் அழைத்துவரப்பட்டு தங்கி மருத்துவ சிகிச்சையுடன் உணவும் வழங்கப்பட்டு வந்தது. அது மட்டுமின்றி இவர்கள் ஆயுள் முழுவதும் இங்கேயே தங்கி இருப்பதற்காக வீடுகள் வழங்கப்பட்டு அரசு சார்பில் அனைத்து பராமரிப்பு வசதிகளும் செய்து தரப்பட்டன.

இந்த நிலையில் சில ஆண்டுகளாக அரசு மறுவாழ்வு இல்ல கட்டிடம் சிதிலம் அடைந்து காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அரசு மறுவாழ்வு இல்லத்தை நேரில்ஆய்வு செய்தார். அப்போது அங்கு வசித்து வரும் மாற்றுத்திறனாளிடம் கலந்துரையாடிய அவர் தொடர்ந்து கட்டிடம் மற்றும் அங்கிருந்த கல்வெட்டுகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கலெக்டர் ஷ்ரவன் குமார், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் ராஜவேல், நகராட்சி தலைவர் திருநாவுக்கரசு, துணை தலைவர் வைத்தியநாதன், அட்மா குழு தலைவர் முருகன், மாவட்ட கவுன்சிலர்கள் வசந்தவேல், சந்திரசேகரன், நகராட்சி கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்