ஹைவேவிஸ் மலைப்பகுதியில் கனமழை எதிரொலி:சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு :சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஹைவேவிஸ் மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

Update: 2023-05-01 18:45 GMT

கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவியில், நீர்வரத்து இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாறைகளாக காட்சியளித்தது. இந்த நிலையில் ஹைவேவிஸ் மற்றும் சுருளி மலைப்பகுதியில் மாலை நேரத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது.

இதேபோல் அருவி பகுதியில் காட்டுயானைகள் நடமாட்டம் இருந்தது. இதனால் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர். இதற்கிடையே காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

இந்நிலையில் ஹைவேவிஸ் மலைப்பகுதியில் நேற்று மதியம் சுமார் 2 மணி நேரம் கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைக்கண்டதும் அருவியில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். மேலும் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால், வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் சுருளி அருவி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்