தேனீக்கள் கடித்து 16 தொழிலாளர்கள் காயம்

முத்துப்பேட்டை அருகே தேனீக்கள் கடித்து 16 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

Update: 2023-05-03 19:15 GMT

முத்துப்பேட்டை;

முத்துப்பேட்டை அருகே தேனீக்கள் கடித்து 16 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

தேனீக்கள் கடித்தன

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஒவரூர் வடக்கு ஆற்றங்கரை அருகே உள்ள புதிய மடை வாய்க்கால் வெட்டும் பணி நேற்று 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நடந்து வந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலில் இருந்த பனை மரத்திலிருந்து கூடுகட்டி இருந்த மரத்தேனீக்கள் கூட்டமாக பறந்து வந்து தொழிலாளர்களை கடித்தது.இதில் அப்பகுதியை சேர்ந்த பூபதி (வயது40), கஸ்தூரி (38), சந்திரா (55), அஞ்சம்மாள் (60), வீரம்மாள் (70), உமா (40), ரேவதி (58), மலர் (35), பத்மா (40), வெள்ளையம்மா (50), ஜோதி (52), சகுந்தலா (45), கமலா (41), செல்வம் (55), ராமச்சந்திரன் (56), கண்ணன் (54) உள்ளிட்ட 16 பேர் காயமடைந்தனர்.

சிகிச்சை

இது குறித்து தகவல் அறிந்து அங்குவந்த ஊராட்சி தலைவர் கணேசன், ஒன்றிய கவுன்சிலர் ராஜா மற்றும் கிராம மக்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்