வெவ்வேறு விபத்துகளில்டிராக்டர் டிரைவர் உள்பட 2 பேர் பலி

வெவ்வேறு விபத்துகளில் டிராக்டர் டிரைவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2023-03-18 18:45 GMT

டிராக்டர் டிரைவர் பலி

தேனி அருகே உள்ள வீரபாண்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 38). டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் இரவு இவர், உப்பார்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் வீரபாண்டிக்கு வந்து கொண்டிருந்தார். உப்பார்பட்டி விலக்கு பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக மாரிச்சாமி மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட மாரிச்சாமி பலத்த காயமடைந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மனைவி காமுத்தாய் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அசோகன் (49). நெசவாளர். கடந்த 13-ந்தேதி இவர், ஆண்டிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். தேனி-ஆண்டிப்பட்டி சாலையில் ஆண்டிப்பட்டி அருகே வந்தபோது, திடீரென அசோகனுக்கு தலை சுற்றல் ஏற்பட்டு மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்