அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு

ஊட்டி அருகே அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

Update: 2023-10-25 20:15 GMT

ஊட்டி அருகே அந்நிய தாவரங்களை அகற்றும் பணிகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

ஆய்வு கூட்டம்

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம், ஊட்டியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நடந்தது. நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, சென்னை ஐகோர்ட்டு சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் நீதிபதி சதீஷ்குமார் கூறும்போது, தமிழக அரசு உத்தரவின்பேரில் நீலகிரி மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதை தீவிரமாக அமல்படுத்தும் வகையில், மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் கண்காணிப்பை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.

தடுப்பு நடவடிக்கைகள்

இதில் முதுமலை புலிகள் காப்பகங்கள் இயக்குனர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் கவுதம், மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், ஆர்.டி.ஓ.க்கள் மகராஜ், முகமது குதுரதுல்லா, பூஷணகுமார், பேருராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம்ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி ஆகியோர் வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, நகராட்சித்துறை உள்பட அனைத்து துறை அலுவலர்களிடம் நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.

சோலை மரங்கள்

பின்னர் தீட்டுக்கல் உரக்கிடங்கை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை உடனுக்குடன் எந்திரத்தின் மூலம் மறுசுழற்சிக்கு கொண்டு வர துறைச்சார்ந்த அலுவலர்களை அறிவுறுத்தினர்.

மேலும் கிளன்மார்கன் பகுதியில் வனத்துறை சார்பில் அந்நிய களைச்செடிகளான சீகை மற்றும் கற்பூர மரங்களை அகற்றி, சோலை மரங்கள் மற்றும் புல்வெளிகள் உருவாக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்