'டாஸ்மாக்' கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன - பணியாளர் சங்கம் அறிக்கை

‘டாஸ்மாக்’ கடைகளில் மதுபானங்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன என்று பணியாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Update: 2022-12-01 23:58 GMT

சென்னை,

தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) தலைவர் நா.பெரியசாமி, த.தனசேகரன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக நிர்வாகம் (டாஸ்மாக்), கடந்த மாதம் 29-ந்தேதி ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது. அதில், பணியாளர்களின் தொழிற்சங்க உரிமையை பறிக்கும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளோம்.

'டாஸ்மாக்' நிர்வாகத்தில் மதுபான சில்லரை விற்பனை பிரிவில் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என சுமார் 25 ஆயிரம் பணியாளர்கள் 20 ஆண்டுகளாக தொகுப்பூதிய ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இப்பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு எதுவும் இல்லாத நிலையில், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையினையும் எதிர்கொண்டு வருகிறார்கள்.

சமீபகாலமாக 'டாஸ்மாக்' நிர்வாகம், மதுபானங்கள் கொள்முதல் செய்வதில், மது நுகர்வோர் விரும்பும் மதுபானங்களுக்கு மாறாக மற்ற வகைகளுக்கு முன்னுரிமை தரப்படுகிறது. இதனால் மதுக்கடைகளில் பெருமளவு மதுபானங்கள் விற்பனையாகாமல் தேங்கிக்கிடக்கின்றன.

பணியாளர்களை மிரட்டியும், அழுத்தம் கொடுத்தும் முறைகேடாக பணம் பறிக்கும் முறை தொடர்கிறது. 'டாஸ்மாக்' நிர்வாகத்தின் பணியாளர் விரோத நடைமுறைகள் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அரசின் கவனத்துக்கு தெரிவித்து, பணியாளர்கள் உரிமையை பறிக்கும் நிபந்தனைகள் கொண்ட 'டாஸ்மாக்' நிர்வாகம் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்