தொழில் தொடங்க கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்

தொழில் தொடங்க கடனுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-15 18:45 GMT

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடனுதவி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

60 சதவீத நிதி

கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தொழில் வளம் பெருகுவதற்காக தமிழக அரசு மானியத்துடன் கூடிய பல்வேறு கடனுதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், மீன், இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், அரிசி ஆலை, இட்லி, தோசை மாவு தயாரித்தல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரித்தல், மசால்வகை பொடிகள் தயாரித்தல், காப்பி கொட்டை அரைத்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி வகை பதப்படுத்தல் போன்ற தொழில்களை தொடங்கவும், குறுந்தொழில் நிறுவனங்கள் விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல், தொழில்நுட்ப ஆலோசனைகள், திறன் மேம்பாட்டு பயிற்சி, திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது.

கடனுதவி

தொழில் நடத்திட தேவையான உரிமங்கள், தரச்சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்த தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குவோர், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் சுயஉதவிக்குழுவினர், கூட்டுறவு சங்கங்கள் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரையிலான உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை. திட்ட தொகையில் 10 சதவீத முதலீட்டாளர் பங்காகவும், 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லா கடனாக வழங்கப்படும்.

அரசு 35 சதவீத மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். சுயஉதவிக்குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40,000 வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்கள் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம், கலெக்டர் அலுவலக வளாகம், சிவகங்கை என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி வழியாகவோ தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்