மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது: 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 54 அடியாக குறைந்துள்ள நிலையில், சேலம் உள்பட 12 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Update: 2024-04-25 22:50 GMT

மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் கால்வாய் பாசனத்திற்காகவும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது.

அணையின் நீர் இருப்பை பொறுத்து குறித்த காலத்திற்கு முன்னதாகவோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டெல்டா பாசனத்திற்கு குறித்த நேரமான ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கடந்த ஆண்டை ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த ஆண்டு அணையின் நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் அணையின் நீர்மட்டம் 102 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 54.32 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கனஅடியாக குறைந்துள்ள நிலையில், அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மாலையில் அணை நீர்மட்டம் 54 அடியாக சரிந்த நிலையில், அணையின் பண்ணவாடி பரிசல் துறை நீர்த்தேக்க பகுதியில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் மற்றும் நந்தி சிலை தற்போது தண்ணீருக்கு வெளியே நன்றாக தெரிகிறது.

மேட்டூர் அணையின் நீர் இருப்பு தற்போது கவலை அளிப்பதாக உள்ளது. அதாவது கடந்தாண்டில் இருந்த நீர் இருப்பை விட இந்த ஆண்டு அணை நீர் இருப்பு 50 சதவீதம் குறைவாகவே உள்ளது.

எனவே தென்மேற்கு பருவமழை குறித்த நேரமான ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கினால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். எனவே தற்போது உள்ள சூழ்நிலையில் அணையின் நீர் இருப்பை கணக்கிட்டு பார்க்கும்போது குடிநீர் தேவையை முற்றிலும் பூர்த்தி செய்ய முடியுமா? என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மேட்டூர் அணையின் மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்