முறப்பநாடு அருகே கடைக்காரர் மீது தாக்குதல்

முறப்பநாடு அருகே கடைக்காரர் மீது தாக்குதல் நடத்திய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-12 18:45 GMT

முறப்பநாடு:

முறப்பநாடு அருகே உள்ள பக்கப்பட்டி தெற்குத்தெரு முருகன் மகன் கணேசன் (வயது 22). இவர் சவுண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இந்நிலையில் இந்த கடை பொருட்களை ஊரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் வைத்திருந்தார். சமுதாய நலக்கூடத்தில் அடிக்கடி ஆடுகள் உள்ளே வருவதால் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கணேசன் சமுதாய நலக்கூடத்தை பூட்டி சாவியை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த, பக்கப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சண்முகம் (44), அவரது மகன்கள் சுந்தர் (19), அசோக் (22), பக்கப்பட்டி தெற்கு தெரு ஆறுமுகம் மகன் மணிகண்டபிரபு (30), அண்ணாத்துரை மகன் முருகேசன் (22) ஆகியோர் சமுதாய நலக்கூடத்திற்கு வந்தனர். அங்கு இருந்த கணேசனிடம் சமுதாய நலக்கூடத்தை நீ எப்படி பூட்டினாய்? என்று கேட்டு தகராறு செய்து, அவரை தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதுகுறித்த புகாரின் பேரில் முறப்பநாடு சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ் வழக்குப்பதிவு செய்து சண்முகம், அவரது மகன் அசோக் ஆகியோரை கைதுசெய்தனர். மேலும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்