உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-12-09 00:15 IST

உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எல்லை கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது 60), விவசாயி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன், வீட்டின் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கினார்.

பின்னர் மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர், வீட்டின் உள்ளே இருந்த பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 7 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்