கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; மனைவி கைது

சிவகிரி அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சித்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-14 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி அருகே கள்ளக்காதலை கண்டித்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சித்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கூலி தொழிலாளி

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் கவுண்டர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 56). இவருடைய மனைவி முத்து (50). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவன் மனைவி இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து சுமார் 25 வருடங்களுக்கு மேல் ஆகிறது.

இந்நிலையில் முத்துவுக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஒருவருக்கும் வெகு நாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், இதனை கணேசன் பலமுறை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினார்

நேற்று முன்தினம் கணேசன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் படுத்து இருந்தார். இதனை பார்த்த மனைவி, ஏன் வேலைக்கு செல்லாமல் தூங்குகிறீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு கணேசன், கள்ளத்தொடர்பை நீ கைவிட்டதால்தான் நான் வேலைக்கு செல்வேன் என்று கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்து, தூங்கிக் கொண்டிருந்த கணவனின் முகத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அவரை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மனைவி கைது

தகவல் அறிந்ததும் சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்