கடும் வெயில்: பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைப்பு.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு!

பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சருடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2023-06-05 06:21 GMT

சென்னை,

2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு 7-ந் தேதி அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை எதுவும் வெளியிடுமா? என்ற எதிர்பார்ப்பில் சமூக வலைதளங்களில் பலரும் பல விதமான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 12-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்திய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்