பட்டா வழங்கக்கோரி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை; 40 பேர் கைது

பட்டா வழங்கக்கோரி கடலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-19 18:45 GMT

நடவடிக்கை இல்லை

கடலூர் பனங்காட்டு காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 75-க்கும் அதிகமான குடும்பத்தினருக்கு வீட்டுமனை இல்லாததால் கடந்த 2005-ம் ஆண்டு அரசால் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிலத்துக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமையில் உழைக்கும் மக்கள் முன்னணி மாநில பொதுச்செயலாளர் சேகர், மக்கள் அதிகாரம் இணை செயலாளர் ராமலிங்கம், பனங்காட்டு காலனி போராட்டக்குழு ஜெயபால் ஆகியோர் முன்னிலையில் கடலூர் ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

40 பேர் கைது

இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்து, மஞ்சக்குப்பம் அரசு தலைமை மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்